கருணை அடிப்படையில் வேலை; வயது வரம்பு தளர்வில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
கருணை வேலைக்கு வயது வரம்பு தளர்வு கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''என் தந்தை அருப்புக்கோட்டை நகராட்சியில் பணியாற்றினார். கடந்த 30.3.2015-ல் இறந்தார். எனக்குக் கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால், எனது விண்ணப்பத்தை நிராகரித்து நகராட்சிகளின் மண்டல இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்து, எனக்குக் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ''அரசு பணி நியமனங்களில் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு வயது உச்சவ்வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த சலுகை மனுதாரருக்கு வழங்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், ''நகராட்சிப் பணி விதிகளில் கருணை அடிப்படையிலான நேரடி வாரிசு பணி நியமனங்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருணை வேலை பெற இறந்தவரின் மகன் அல்லது திருமணமாகாத மகளுக்கு 30 வயதுக்கும், இறந்தவரின் கணவர் அல்லது மனைவிக்கு 40 வயதுக்கும் உட்பட்டிருக்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, ''நகராட்சிகளின் பணி விதிப்படி கருணை பணி நியமனங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் மனுதாரர் எந்த தளர்வும் கோர முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
