மநீமவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்குப் புதிய பதவி

திமுக தலைவர் ஸ்டாலினுடன் மகேந்திரன்.
திமுக தலைவர் ஸ்டாலினுடன் மகேந்திரன்.
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு அக்கட்சியில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர் மகேந்திரன். மருத்துவரான மகேந்திரன் தனி அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். பின்னர், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கட்சியின் ஆரம்பக் காலத் தலைவர்களில் ஒருவராக, துணைத் தலைவராக கமலுடன் இணைந்து பயணித்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், கடந்த ஜூலை 8 அன்று கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக மகேந்திரனை நியமித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (ஆக. 07) வெளியிட்ட அறிவிப்பில், "திமுக சட்டதிட்ட விதி: 31 பிரிவு: 19-ன் படி திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக, ஆர்.மகேந்திரன் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in