

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இன்று (ஆக.4) மேற்கொள்ளப்பட்ட 6-வது நாள் அகழாய்வின்போது இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளது.
சங்ககாலப் பழமை வாய்ந்த, தமிழகத்தில் எஞ்சியுள்ள ஒரே கோட்டையான பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியன் தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக இன்று (ஆக.4) அகழாய்வுப் பணி நடைபெற்றது.
அப்போது, 10 செ.மீ. நீளமுள்ள, துருப்பிடித்த நிலையில் இரும்புக் கம்பி ஒன்று கிடைத்துள்ளது. அதன் ஒரு பகுதி வளைந்த நிலையில் இருந்தது.
அகழாய்வின்போது, ஏராளமான கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும், சிறிய அளவிலும், துகள்களாகவும் இரும்பு உருக்குக் கழிவுகள் கிடைத்துவந்த நிலையில், நேற்று இரும்புக் கம்பி கிடைத்திருப்பது ஆய்வுக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக இருப்பதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், இருக்கை மருத்துவ அலுவலர் இந்திராணி உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.
அப்போது, வேப்பங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராஜாங்கம், தொல்லியல் ஆய்வுக் கழகப் பொறுப்பாளர் எம்.ராஜாங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது, பொற்பனைக்கோட்டையின் சங்ககால வரலாறு குறித்துப் பேராசிரியர் இனியன் விளக்கினார்.