

அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 144 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 701 புதிய பேருந்துகள் மற்றும் 65 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (திங்கள்கிழமை) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் விரிவடைந்து வருகின்றன. பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு, புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 52 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 97 பேருந்துகள், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 85 பேருந்துகள், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 93 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 202 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்
154 பேருந்துகள், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 18 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 30 வழித்தடங்களில் 65 சிற்றுந்துகள், என மொத்தம் 144 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 701 புதிய பேருந்துகள் மற்றும் 65 புதிய சிற்றுந்துகளை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தங்கமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (பொறுப்பு) ச.வி. சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள் எல்.சீனிவாசன்