சிவகங்கை அரசு மருத்துவமனையில் 276 தற்காலிகப் பணியிடங்களுக்கு 5,000 விண்ணப்பங்கள்: பரிந்துரைக் கடிதங்களும் குவிந்தன

சிவகங்கை அரசு மருத்துவமனையில் 276 தற்காலிகப் பணியிடங்களுக்கு 5,000 விண்ணப்பங்கள்: பரிந்துரைக் கடிதங்களும் குவிந்தன
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவமனையில் 276 தற்காலிகப் பணியிடங்களுக்கு 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேலும் இப்பணியிடங்களுக்கு அமைச்சர், எம்எல்ஏக்களின் பரிந்துரைக் கடிதங்களும் குவிந்துள்ளன.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா முதல் அலை, இரண்டு அலையின்போது தடுப்புப் பணிக்காக அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது தேசிய சுகாதாரத் திட்டத்தில் நேரடியாக 6 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 75 செவிலியர், 10 ஆய்வக டெக்னீசியன், 81 பல்நோக்குப் பணியாளர், 10 நுண் கதிர் வீச்சாளர், 15 டயாலிசிஸ் டெக்னீசியன், 25 இசிஜி டெக்னீசியன், 10 சிடி ஸ்கேன் டெக்னீசியன், 30 அனஸ்தீஸியா டெக்னீசியன், 20 மருந்தாளுநர் என 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மேலும் ஏற்கனவே கரோனா சமயத்தில் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுப் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை மீண்டும் பணியமர்த்தினால் 50 பணியிடங்கள் கூட மிஞ்சாது. ஆனாலும் இப்பணியிடங்களுக்கு அமைச்சர், எம்எல்ஏக்களின் பரிந்துரைக் கடிதங்கள் குவிந்துள்ளன.

கட்சிப் பிரமுகர்கள் சிலர் இப்பணியிடங்களுக்குப் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் இப்பணியிடங்களை நிரப்புவதில் மருத்துவமனை நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘ஏற்கெனவே கரோனா காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும். மற்ற பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நியக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in