சிவகங்கையில் கத்திக் குத்துப்பட்டு சிகிச்சையில் இருந்த மற்றொரு மருத்துவ மாணவரும் மரணம் : ஒரே குடும்பத்தில் இருவர் கொலையானதால் சோகம்

கொலை செய்யப்பட்ட ஜோசப்.
கொலை செய்யப்பட்ட ஜோசப்.
Updated on
1 min read

சிவகங்கையில் கத்தியால் குத்துப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மற்றொரு மருத்துவ மாணவரும் மரணமடைந்தார். ஒரே குடும்பத்தில் மருத்துவம் படித்த அண்ணன், தம்பி இருவரும் கொலையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்துநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இருதயராஜ் (60). இவரது மகன்கள் ஜோசப் (25), கிறிஸ்டோபர் (22). பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்த இவர்கள், கரோனா கட்டுப்பாடு காரணமாக வீட்டிலேயே ஆன்லைனில் படித்து வந்தனர்.

ஜூலை 25-ம் தேதி அண்ணாமலைநகரில் தங்களது தோட்டத்தில் மது அருந்திய 7 பேர் கொண்ட கும்பலை இருதயராஜ், ஜோசப், கிறிஸ்டோபர் ஆகிய மூவரும் தட்டி கேட்டனர்.

ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் மூவரையும் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே கிறிஸ்டோபர் உயிரிழந்தார். இருதயராஜூவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த ஜோசப்பிற்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஜோசப்பும் இறந்தார். ஒரே குடும்பத்தில் மருத்துவம் படித்த அண்ணன், தம்பி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இக்கொலை தொடர்பாக மருதுபாண்டி, நந்தகுமார், வசந்த், சரவணன், ராகுல்பாலாஜி ஆகிய 5 பேரை சிவகங்கை டவுன் போலீஸார் கைது செய்தனர். மேலும் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரபு ஆகியோரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in