ஆட்டோ, கார்களில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றுவது குற்றம் : உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆட்டோ, கார்களில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றுவது குற்றம் : உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஆட்டோ மற்றும் கார்களில் கட்டண மீட்டர்கள் முறையாக பொருத்தப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யாமல் தகுதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜாகீர் உசேன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையில் பெரும்பாலான ஆட்டோக்கள் மோட்டார் வாகன விதியை பின்பற்றி இயக்கப்படுவதில்லை.

இருக்கை மாற்றம் செய்து அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். பெரும்பாலான ஆட்டோக்களில் கட்டண மீட்டர் இல்லை. இதை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு தகுதிச்சான்று வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆட்டோ மற்றும் கார்களில் உள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாகும். பொதுமக்களிடம் மோசடியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

மனுதாரரின் கோரிக்கை மீது மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரைக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ மற்றும் கார்களில் கட்டண மீட்டர் முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யாமல் தகுதிச் சான்றிதழ் வழங்க கூடாது. விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதையும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படவில்லை என்பதையும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

அதே போல் கட்டண மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதா? அனுமதிக் கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவு ஆட்கள் ஏற்றிச் செல்கிறார்களா?, விதி மீறல் உள்ளதா? என்பதையும், குறிப்பாக ஷேர் ஆட்டோக்களை மினி பேருந்து போலவும், மினி பேருந்துகளை பேருந்துகளாகவும் இயக்கப்படுவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் போக்குவரத்து இணை ஆணையரிடம் அறிக்கை அளிக்க வேண்டும். இதனை இணை ஆணையர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in