உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் ஆலோசனை: பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் ஆலோசனை: பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் விடுபட்டபகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்நடத்துவது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற,கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டு, பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாகஉருவாக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல், சென்னைஉட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் ஆகியவை நடத்தப்படவில்லை. வார்டு வரையறை, இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை நிர்ணயம் செய்வது போன்ற பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், வரும்செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரையிலும் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறைகளின் அமைச்சர்களும் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலையும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலையும் நடத்தி முடிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வார்டு வரையறை பணிகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், அதுதொடர்பான பணிகளைவிரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாககூறப்படுகிறது.

பேரவை நூற்றாண்டு விழா ஏற்பாடுகள்

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா வரும் ஆகஸ்ட் 2 மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலக பழைய கட்டிடத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடக்க உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடக்கும் இவ்விழாவில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேரவைத் தலைவர் அப்பாவு அறையில் நேற்று மாலை ஆலோசனை நடந்தது. துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்காக யார் யாருக்கு அழைப்பு விடுப்பது, இருக்கை ஏற்பாடு, கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in