தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: அரசின் நிலைப்பாட்டைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்குவது குறித்த நிலைப்பாட்டை விளக்கி, பதில் மனுத்தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க உத்தரவிடக் கோரி தோழர் சட்ட மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “தூய்மைப் பணி தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும்போது மரணம் அடைய வாய்ப்பு உள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை.

இது சம்பந்தமாக அனுப்பிய மனுவைப் பரிசீலித்த மத்திய அரசு, கோரிக்கையைப் பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழக நகராட்சி நிர்வாக ஆணையருக்குப் பரிந்துரைத்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ''ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்களைப் போல தங்களுக்கும் இடர்படி வழங்கக் கோருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் இடர்படி கோர உரிமையில்லை. ஆனால், அனைவருக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன'' என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தூய்மைப் பணியாளர்களின் பணியில் எந்த இடர்படியும் இல்லை என கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை பதில் மனுவாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in