தமிழக நீதிமன்றங்களில் காகிதமில்லாப் பயன்பாடு கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக நீதிமன்றங்களில் காகிதமில்லாப் பயன்பாடு கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மின்னஞ்சல் முறையில் வழக்குகள் தாக்கல் செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசும், உயர் நீதிமன்றப் பதிவுத்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிதின் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்ய அதிக எண்ணிக்கையில் காகிதங்கள் தேவை. வரும் 2024-25 ஆம் ஆண்டில் நாட்டின் காகிதத் தேவையைப் பூர்த்தி செய்ய 1.5 கோடி டன் மரக்கட்டைகள் தேவைப்படும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது காடுகளையும், மரங்களையும் அழிக்க வகைசெய்யக்கூடிய வகையில் இருப்பதால், அனைத்துக் கடிதங்களையும் மின்னஞ்சல் மூலமும், குறுந்தகவல்கள் மூலமும் தெரிவிக்க உச்ச நீதிமன்றம், அதன் பதிவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதே நடைமுறையை தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் பின்பற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மத்திய அரசை எதிர்மனுதாரராகச் சேர்த்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், உயர் நீதிமன்றப் பதிவுத்துறைக்கும் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in