

புதுச்சேரியில் புதிதாக 113 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று( ஜூலை 27)வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,124 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 75, காரைக்கால் - 13, ஏனாம் - 5, மாஹே - 20 பேர் என மொத்தம் 113 (2.21 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் காரைக்காலைச் சேர்ந்த 51 வயது ஆண் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,791 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 530 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 189 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 734 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக 98 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 816 (97.75 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 14 லட்சத்து 78 ஆயிரத்து 22 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 592 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6 லட்சத்து 82 ஆயிரத்து 986 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 குழந்தைகளுக்கு கரோனா
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கரோனா வார்டில் 7 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 5 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள் என 5 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் 2 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.