Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

இந்த ஆண்டு வெளியிடப்படும் வேளாண் பட்ஜெட் விவசாயிகளிடம் வரவேற்பை பெறும்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நம்பிக்கை

சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நேற்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் சிங், கூடுதல் ஆணையர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். 2021-22 கரும்பு அரவைப் பருவம் நல்ல முறையில் இயங்குவற்கும், சர்க்கரை ஆலை கட்டுமானத்தை உயர்த்துவது உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து விவாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். கரும்புக்கு கூடுதல் விலை அளிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் அறிவித்தார். அதை நிச்சயம் நிறைவேற்றுவார்.

கடந்த ஆட்சியில் இந்த ஆலை போதிய பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தது. அதை சரி செய்வதற்காகவே தற்போது சர்க்கரைத் துறை ஆணையர் நேரில் வந்து ஆய்வு நடத்தி உள்ளார். இந்த சர்க்கரை ஆலையின் கட்டுமான பிழிதிறன் 7.54 சதவீதமாக இருக்கிறது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சர்க்கரை ஆலையில் எத்தனால் பிளான்ட் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மின்சார உற்பத்திக்கான பணிகள் நடந்தது. அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் அது முடங்கிவிட்டது. தற்போது அதை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அறிவித்த வேளாண்மைக்கான தனி பட்ஜெட்மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பாண்டு வேளாண் பட்ஜெட் வெளியிடப்படும். இது விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது இந்த பட்ஜெட் விவசாயிகளிடம் வரவேற்பை பெறும். விவசாயிகளின் முன்னேற் றத்திற்காகவும் விவசாயிகள் வளமுடனும், நல முடனும் வாழ வாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்றார். முன்னதாக சர்க்கரை ஆலையை சர்க்கரைத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டனர். அப்போது ஆலையின் அரவை இந்திரம், அதன் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித் சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன், தலைமை சர்க்கரை பொறியாளர் பிரபாகரன், சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x