

தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லை. இதனால் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேவகோட்டையில் 1, 6 மற்றும் 9-வது வார்டுகளில் 3 நகராட்சி தொடக்கப் பள்ளிகள், 10, 14 மற்றும் 16-வது வார்டுகளில் 3 நகராட்சி நடுநிலைப் பள்ளிகள், 6-வது வார்டில் நகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. ஆனால் நகராட்சி மேல்நிலைப் பள்ளி இல்லை. இதனால் மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு அங்குள்ள 3 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 2 தனியார் பள்ளிகளில் சேர வேண்டியுள்ளது.
பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்ப் பதில்லை. அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களால் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
இதனால் ஆண்டுதோறும் கணிசமானோர் படிப்பை கைவிடு கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. தேவகோட்டை நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இல்லாத தால் அப்பகுதி மாணவர்கள் சலுகையை பெறமுடியவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பொன்னுச்சாமி கூறியதாவது:
இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இங்குள்ள நகராட்சி உயர் நிலைப்பள்ளி மாணவர்கள், மேல்நிலை வகுப்புக்காக வேறு பள்ளிகளில் சேருவதில் சிரமம் உள்ளது. மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு சலுகை யைப் பெற அரசு மேல்நிலைப் பள்ளியை நடப்பாண்டில் தொடங்க வேண்டும் என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசியல் அழுத்தம் இருந்தால் மட்டுமே தற்போதுள்ள உயர் நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முடியும் என்றார்.