

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது தயங்குவது ஏன் என, திமுக்கு அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் .
இதில், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:
அதிமுக அரசை அடிமை அரசு என, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். ஆனால் காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்கள் முடக்கினர். இதைத்தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி காவிரி ஆணையத்தை பெற்றுத்தந்தோம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வரியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பிஹாரை எடுத்துக்கொண்டால் ஒரு லிட்டருக்கு பெட்ரோல்க்கு 24.71 சதவீதமும், டீசலுக்கு 18.34 சதவீதமும், டில்லியில் பெட்ரோலுக்கு 27 சதவீதமும் டீசலுக்கு 17.24 சதவீதமும் கோவாவில் பெட்ரோலுக்கு 16.66 சதவீதமும்,டீசலுக்கு 18.88 சதவீதமும், குஜராத்தில் 25.45 சதவீதமும், டீசலுக்கு 25.55 சதவீதம், மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு 25.25 சதவீதமும் டீசலுக்கு 17.54 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் பெட்ரோலுக்கு 26.90 சதவீதமும், டீசலுக்கு 16.84 சகவீதமும், உத்தரகாண்டில் பெட்ரோலுக்கு 27.15 சதவீதமும், டீசலுக்கு 16.82 சதவீதமும்வரி விதிக்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சகவிதமும் டீசலுக்கு 24.08சகவீதமும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.27.75 டீசலுக்கு 20.35 அரசுக்கு கிடைக்கிறது
திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, 75 நாட்களாகயும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை.
பெட்ரோல் டீசல் விலை குறைக்கும் அதிகாரத்தில் அரசு உள்ளது அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பெட்ரோல் டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும்.
தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். தடுப்பூசியில் வெள்ளை அறிக்கை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.