பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழா: புதுச்சேரியில் போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை

போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை.
போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை.
Updated on
1 min read

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அதிக அளவில் யாரும் பங்கேற்கவில்லை.

பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலையைப் புரட்சி மூலம் மக்கள் தகர்த்து 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களாட்சியை நிறுவினர். இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அக்காலத்தில் மின்சாரம் இல்லாததால் மக்கள் தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றனர்.

இத்தினத்தை நினைவுகூரும் வகையில், பிரான்ஸ் நாடு முழுவதிலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழும் அனைத்து நகரங்களிலும் ஜூலை 13-ம் தேதி பேரணி, தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். கரோனா காரணமாக, புதுச்சேரியில் நேற்று இரவு (ஜூலை 13) நடைபெற இருந்த மின்விளக்கு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, பிரெஞ்சு தேசிய தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இன்று (ஜூலை 14) கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, புதுச்சேரி பிரெஞ்சு துணைத்தூதர் லிசே டல்போட் பரே, துணை மாவட்ட ஆட்சியர் (தலைமையகம்) முரளிதரன் ஆகியோர், போர் வீரர் நினைவுச் சின்னத்துக்கு மலர் வளையம் வைத்துப் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், இந்தியா, பிரான்ஸ் இரு நாட்டுக் கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. கரோனா காரணமாக, இதில் பிரெஞ்சு ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஒருசிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in