ஹைதி அதிபர் கொலை வழக்கில் திருப்பம்: முக்கிய குற்றவாளி கைது

ஹைதி அதிபர் கொலை வழக்கில் திருப்பம்: முக்கிய குற்றவாளி கைது
Updated on
1 min read

ஹைதி அதிபர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் கைது செய்யப்பட்டிருக்கிறார்

கரிபீயன் தீவில் அமைந்துள்ள நாடு ஹைதி. இதன் அதிபர் ஜொவினெல் மொய்சே கடந்த புதன்கிழமை அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக 28 பேர் கொண்ட வெளிநாட்டுக் கூலிப்படையை ஹைதி போலீஸார் கைது செய்தனர்.

இதில் இருவர் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் 2 பேர் ஹைதி அமெரிக்கர்கள். இந்தக் கொலையில் தற்போது புதிய திருப்பமாக முக்கிய குற்றவாவாளியான கிறிஸ்டியன் இம்மானுவேல் சனோன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், “இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி கிறிஸ்டியன் இமானுவேல் சனோன் (60) கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஹைதியில் பிறந்து தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்.

இவர் ‘ ஹைதியின் தலைமை’ என்ற தலைமைப்பில் 2011 ஆம் ஆண்டு யூடியூப்பில் பேசிய வீடியோவில் தன்னை மருத்துவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில அவர் ஹைதி அரசுக்கு எதிரான கருத்துகளை பேசி இருக்கிறார். அவரிடம் இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

என்ன நடந்தது?

ஹைதியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் அந்நாடு பெரும் கலவரங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வறுமையாலும் வேலையின்மையாலும் கடந்த பல ஆண்டுகளாக ஹைதி சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு ஹைதியின் அதிபராக ஜொவினெல் மொய்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் கலவரம் காரணமாக, அதிகாரபூர்வமாக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் மொய்சே ஹைதியின் அதிபராகப் பதவியேற்றார்.

மொய்சேவின் பதவியேற்புக்குப் பிறகு நாட்டில் வறுமை, வேலையின்மை குறையவில்லை. மாறாக மொய்சேவுக்கு எதிராக நாளும் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

ஹைதி நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொந்தளிப்புகளின் மையமாக மொய்ஸே கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்தார்.

மேலும், நாட்டின் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்தார். இதன் காரணமாக அவருடைய பாதுகாப்புக்கும் அச்சம் நிலவியது.

மொய்சேவின் பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், தான் 2017ஆம் ஆண்டுதான் பதவியேற்றதாகத் தெரிவித்து தனது பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டித்தார் மொய்சே. இந்த நிலையில் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

1.1 கோடி மக்கள்தொகை கொண்ட ஹைதியில் 59%க்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in