

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 100-ஐத் தாண்டியுள்ளது. அதன்படி புதிதாக 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 13) வெளியிட்ட தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 5,758 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 106 பேருக்கும், காரைக்காலில் 15 பேருக்கும், மாஹேவில் 3 பேருக்கும் என மொத்தம் 124 (2.15 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அது தற்போது மீண்டும் 100-ஐக் கடந்துள்ளது. ஏனாமில் புதிதாகத் தொற்று பாதிப்பு இல்லை. மேலும், உயிரிழப்பும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,771 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 181 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 262 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,122 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,384 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 153 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 26 (97.35 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 13 லட்சத்து 95 ஆயிரத்து 187 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 லட்சத்து 91 ஆயிரத்து 961 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 832 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.