தமிழக நிதி அமைச்சர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழக நிதி அமைச்சர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

தமிழக நிதி அமைச்சர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாக பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து என்னைக் கைது செய்தனர்.

உள்நோக்கத்துடன் என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் என் மீது பதிவு செய்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் தமிழக நிதி அமைச்சரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகளை இட்டுள்ளார். இதனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்துசெய்யக் கூடாது'' என்று தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை ரத்துசெய்ய மறுத்து, வழக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in