

கராலில் சிகிச்சை பெற்று வரும் ரிவால்டோ யானையின் நிலை குறித்து ஆய்வு செய்து வனத்துறைக்கு அறிக்கை அளிக்கப்படும் என நிபுணர் குழுத் தலைவர் மனோகரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வாழைத் தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45 வயதுடைய ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித் திரிந்தது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் பார்வைக் குறைபாடு காரணமாக வனப்பகுதிக்குள் செல்லாமல், குடியிருப்புப் பகுதிகளிலேயே நடமாடிய ரிவால்டோ யானை, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியது.
கடந்த மே மாதம் 5-ம் தேதி இந்த யானையைப் பிடித்த வனத்துறையினர், அதை கரால் என்னும் மரக்கூண்டில் அடைத்து, 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரிவால்டோ யானையின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யவும், வனப் பகுதியில் விடுவிப்பதா அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அழைத்துச் சென்று பராமரிப்பதா என்பது குறித்தும் ஆய்வு செய்யத் தமிழக வனக் கால்நடைத் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் மனோகரன் தலைமையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்லைக்கழகப் பேராசிரியர் தர்மசீலன், எஸ்பிசிஏ உறுப்பினர் ரமா, உலகளாவிய வனவிலங்குகள் நிதியம் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், மோகன்ராஜ், ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாசன், உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் இன்று மாலை, வாழைத்தோட்டத்தில் கராலில் உள்ள ரிவால்டோ யானையை ஆய்வு செய்தனர். யானையின் உடல்நிலை, தும்பிக்கை காயத்தால் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து புலிகள் காப்பகத் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் குழுவினருக்கு விவரித்தார்.
குழுவின் தலைவர் டாக்டர் மனோகரன் கூறும்போது, ''கூண்டில் உள்ள யானையை ஆய்வு செய்தோம். யானையின் உடல்நிலை மற்றும் மறுவாழ்வுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வு செய்து, விவாதித்து, விரிவான அறிக்கை வனத்துறைக்குச் சமர்ப்பிக்கப்படும்'' என்றார்.