பசுமைத் தீர்ப்பாய மண்டல அமர்வுகளின் உத்தரவு இந்தியா முழுவதும் பொருந்தும்: உயர் நீதிமன்றம் தெளிவு

பசுமைத் தீர்ப்பாய மண்டல அமர்வுகளின் உத்தரவு இந்தியா முழுவதும் பொருந்தும்: உயர் நீதிமன்றம் தெளிவு
Updated on
1 min read

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வுகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும், டெல்லியில் உள்ள முதன்மை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவு நாடு முழுவதும் பொருந்துமெனக் கூற முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பெறத் தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இந்த விவகாரம் நாடு முழுவதுக்குமானது எனக் கூறி வழக்கை, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஐந்து அமர்வுகளும் பிறப்பிக்கும் உத்தரவுகள், நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும், டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவு நாடு முழுவதும் பொருந்துமெனக் கூற முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், வழக்குத் தொடர்வதற்காக டெல்லி வரைக்கும் சென்று அதிக செலவு செய்யக்கூடாது என்பதற்காகவே ஐந்து மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டதாகத் தெரிவித்த நீதிபதிகள், டெல்லி தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவே நாடு முழுவதற்கும் பொருந்தும் என்ற நடைமுறையைப் பின்பற்றினால், அது நீதியை மறுப்பதற்குச் சமம் எனக் குறிப்பிட்டனர்.

மக்களுக்கு நீதி வழங்கவே தாலுக்கா அளவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து, விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in