பள்ளி மாணவர்களுக்குச் சமைக்கப்பட்ட சத்துணவு வழங்குவது தொடர்பான நிலைப்பாடு: மத்திய - மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பள்ளி மாணவர்களுக்குச் சமைக்கப்பட்ட சத்துணவு வழங்குவது தொடர்பான நிலைப்பாடு: மத்திய - மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

பள்ளி மாணவர்களுக்குச் சமைக்கப்பட்ட சத்துணவை வழங்குவது தொடர்பான நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கரோனா பரவலைத் தடுக்க 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை எனவும், அதனால் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமும் மாணவர்களுக்குச் சத்துணவு கிடைக்கும் வகையில், அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட சத்துணவை வழங்குவது தொடர்பான திட்டத்தைத் தாக்கல் செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாணவர்களுக்குச் சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சமைக்கப்பட்ட ஊட்டச்சத்துடன் கூடிய உணவுப்பொருளை மாணவர்களுக்கு வழங்கக் கோரியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல இந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சமைக்கப்பட்ட சத்துணவை மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பாகத் தங்கள் நிலைபாட்டைத் தெரிவிக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in