இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்: திலீப் குமார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திலீப் குமார்: கோப்புப்படம்
திலீப் குமார்: கோப்புப்படம்
Updated on
1 min read

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திலீப்பின் உடல்நிலை தேறி வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார். அவருடைய மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

"புகழ்பெற்ற இந்தியத் திரைக் கலைஞரும், இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான திலீப் குமார், தனது 98-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

'Tragedy king' என்று அனைவராலும் அறியப்பட்ட திலீப் குமார் இந்தியத் திரையுலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்தார். இவர் திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே மற்றும் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என்பதோடு, சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதினை எட்டு முறை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

கலைப் பணியுடன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மக்கள் பணியும் ஆற்றிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கும் அவரது அன்பு ரசிகர்களுக்கும் என்னுடைய சார்பாக மட்டுமின்றி, தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in