

புதுச்சேரியில் புதிதாக 140 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 6) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,831 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 111, காரைக்கால் - 20, மாஹே - 9 பேர் என மொத்தம் 140 (2.05 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏனாமில் யாரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகவில்லை. மேலும், புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,763 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 227 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 254 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,537 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,791 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 219 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 1 லட்சத்து 14 ஆயிரத்து 673 (96.99 சதவீதம்) பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 13 லட்சத்து 53 ஆயிரத்து 16 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 லட்சத்து 61 ஆயிரத்து 936 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரத்து 77 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.