

தமிழக நிதியமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பேசியதாக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் உள்ளிட்ட இருவரை இன்று போலீஸார் கைது செய்தனர்.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன். இவர், சமீபத்தில் யூடிடிப் சேனல் ஒன்றில் பேசியபோது, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு செய்யும் வகையில் சில சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக அமைச்சரின் தரப்பைச் சேர்ந்தவரும், திமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகியுமான பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா, தென்மாறன் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கில் திருமாறன், அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து கோரிப்பாளையத்தில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாநில கொள்கை பரப்பு செயலர் ஜெயக்குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் செய்தனர்.
திருமாறனை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். அவர்களைப் போலீஸார் கைது செய்து பிறகு விடுவித்தனர்.
இதற்கிடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட திருமாறன் உள்ளிட்ட இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டடதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.