

புதுச்சேரியில் புதிதாக 147 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது சிகிச்சையில் 2,107 பேர் உள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 3) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 7,708 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 103, காரைக்கால் - 34, ஏனாம் - 3, மாஹே - 7 பேர் என மொத்தம் 147 (1.91 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்கால், மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,760 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 787 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 920 (96.72 சதவீதம்) பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 306 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,801 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 271 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 13 லட்சத்து 32 ஆயிரத்து 960 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 லட்சத்து 44 ஆயிரத்து 663 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 12 ஆயிரத்து 428 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.