பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்க திருத்த மசோதா: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்: கோப்புப்படம்
ராமதாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தின் 342-வது பிரிவைத் திருத்தும் மசோதாவை, வரும் 19-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 03) தன் ட்விட்டர் பக்கத்தில், "பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்தெந்த சாதிகளைச் சேர்த்து, இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று, மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது!

அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 102-வது திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று, மராத்தா வழக்கில் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுவதாகவும், இந்த சமூக அநீதியைக் களைய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றும் கடந்த மே 9-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதை இப்போது மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி!

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்கும் உரிமையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 342-வது பிரிவைத் திருத்தும் மசோதாவை வரும் 19-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in