காரைக்காலிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து: முதல்வர் ரங்கசாமியுடன் துணை தூதர் ஆலோசனை

காரைக்காலிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து: முதல்வர் ரங்கசாமியுடன் துணை தூதர் ஆலோசனை
Updated on
1 min read

காரைக்காலிலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத்தூதர் வெங்கடேஸ்வரன் கலந்து ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.

தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் வெங்கடேஸ்வரன் துணைநிலை ஆளுநர் தமிழிசையை இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது இரு நாட்டு நல்லுறவுகள், அரசியல் பண்பாட்டு தொடர்புகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். இச்சந்திப்பின்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை, "புதுச்சேரி விமான நிலைய விரிவாக்க முயற்சி மூலம், மருத்துவ சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இலங்கை உடன் போக்குவரத்து தொடர்புகளை எளிமைப்படுத்த உதவும்" என்று துணைத்தூதரிடம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசையை இலங்கைக்கு வர துணைத்தூதர் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையிலுள்ள அவரது அறைக்கு சென்று சந்தித்தார்.

அச்சந்திப்பு தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் வெங்கடேசுவரனிடம் கேட்டதற்கு, "காரைக்காலில்- இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து பற்றி முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி புதுச்சேரி அரசு தரப்பில் விசாரித்தபோது, "காரைக்காலில் இருந்து இலங்கையில் ஜாப்னா துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம். கப்பல் போக்குவரத்து தொடங்கிய பிறகு காரைக்காலில் இருந்து இலங்கையை 3 மணி நேரத்தில் அடையலாம். " என்று குறிப்பிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in