

நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.டி.ஆறுமுகம் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ", நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாதை கட்டப்படுகிறது எனவும், இந்த கட்டுமானத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (ஜூன் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கார்த்திகேயன், வாதிடுகையில் " ரயில்வே நடைபாதைக்காக இரண்டு நீர்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
அப்போது, ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், "நடைபாதை கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
யில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டனர். அப்போது நீதிபதிகள் " நீர்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹாலே கட்டினாலும் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், "உயர் நீதிமன்றத்துக்கு வரும் பெரும்பாலான வழக்குகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே துறை வளர்ச்சிப் பணிகளுக்காக நீர்நிலைகளை ஆக்கிரமித்ததை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளாகவே உள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் அவசியமானது என்றாலும் அவை இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் வகையில் இருக்ககூடாது. குறிப்பாக, நீர் வளங்களை பாதிப்பதாக இருக்கக்கூடாது" என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
பின்னர், சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையைச் சார்ந்தது, நடைபாதை கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை உள்ளிட்டவை குறித்து, தமிழக அரசு, தெற்கு ரயில்வே 3 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.