

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பதிவான வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், ஆசிரியர் தீபா வெங்கட்ராமன் உள்ளிட்ட மூவர், சிபிசிஐடி மீது குற்றம் சாட்டி முன்ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு பதிலளிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல் ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டுள்ளர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், அவரது மருமகள் பாரதி, பள்ளி ஆசிரியை தீபா வெங்கடராமன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில், 2010-12ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி காவல்துறையினர், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் தங்களையும் சேர்த்துள்ளதாகவும் சிபிசிஐடி மீது புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் முன்பாக வாக்குமூலம் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதைத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும், தீபாவின் முன்ஜாமீன் தவிர மற்ற இருவரது வழக்குகளில் சிபிசிஐடியை எதிர் மனுதாரராகச் சேர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மூவரின் முன்ஜாமீன் மனுக்களுக்கும் சிபிசிஐடி காவல்துறையிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, திருத்த மனுக்களைத் தாக்கல் செய்ய இரு மனுதாரர்களுக்கும் அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.