கரோனா 2-ம் அலைப் பரவலுக்குத் தேர்தல்தான் காரணம்: உயர் நீதிமன்றம் கருத்து

கரோனா 2-ம் அலைப் பரவலுக்குத் தேர்தல்தான் காரணம்: உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலைப் பரவலுக்குத் தேர்தல் காரணமாக அமைந்தது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 2016 அக்டோபர் முதல் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது மாநகராட்சி, நகராட்சிகள்தான். எனவே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வாதிடுகையில், ''தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்கள் 21 முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் கூறும்போது, ''தமிழகத்தில் கரோனா 2-ம் அலை பரவலுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல்தான் காரணம். மீண்டும் தேர்தல் நடத்தினால் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும், கட்சியினர், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவர். இது கரோனா பரவுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

மேலும், தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முடிவு வந்தபிறகே இந்த வழக்கை விசாரிக்க முடியும்'' என்று கூறி விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in