கிராமப்புற மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வி வசதி கோரி மனு: மத்திய-மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கிராமப்புற மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வி வசதி கோரி மனு: மத்திய-மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கணினி, மொபைல் வசதிகளைப் பெற முடியாது என்பதால், அந்த மாணவர்களுக்காக ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவர்களது மனுவில், “கரோனா ஊரடங்கு காரணமாக, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு உதவியாக வேலைக்குச் செல்கின்றனர். அதைத் தடுக்க கிராமப்புறங்களில் ஒவ்வொரு தெருக்களிலும், மாணவர்கள் கல்வி பெற ஏதுவாக ஆன்லைன் டிஜிட்டல் ஏற்பாடுகளை மேற்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த தகுதியான ஒருவரை நியமித்துக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். மேலும், மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதி செய்ய மாவட்ட, தாலுக்கா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in