Published : 22 Jun 2021 10:22 PM
Last Updated : 22 Jun 2021 10:22 PM

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீளும் திண்டுக்கல் மாவட்டம்: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்தது

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்த நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 570 பேராகக் குறைந்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு மிகக்குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலை தொடக்கத்தில் தினமும் 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இது படிப்படியாக தினமும் 300 பேர், 400 பேர் என அதிகரித்து அதிகபட்சமாக மே.23 ம் தேதி ஒரே நாளில் 542 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புக்களும் அதிகரித்தது. அதிகபட்சமாக ஜூன் 1 ம் தேதி ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்த நிகழ்வும் நடந்தது.

மயானத்தில் உடல்களை எரிக்க பல மணிநேரம் காத்திருக்கும் நிலை இருந்தது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துமனைகளில் படுக்கை வசதி இல்லாதநிலையும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காணப்பட்டது.

இதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் கரோனா பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வந்தது.

தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. படிப்படியாகக் குறைந்து நேற்று 78 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. உயிரிழப்பு ஏதும் இல்லை.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டுதனிமையில் இருப்பவர்கள் உட்பட சிகிச்சையில் இருப்பவர்கள் மொத்தம் 570 பேர் தான். இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் பல காலியாகவுள்ளன.

மூன்றாம் அலை வருவதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பை முற்றிலும் குறைத்துவிட்டால், மூன்றாவது அலையை எளிதில் எதிர்கொள்ளலாம், என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொடக்கத்தில் தயக்கம் காட்டிய பொதுமக்கள், தற்போது ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு தனியாக முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்து வருகின்றன.

தற்போது தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்தப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்கின்றனர். இது மூன்றாவது அலையின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x