Last Updated : 22 Jun, 2021 07:24 PM

 

Published : 22 Jun 2021 07:24 PM
Last Updated : 22 Jun 2021 07:24 PM

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைமை: அதிருப்தியில் புதுவை பாஜக எம்எல்ஏக்கள்; விரக்தியில் ஆதரவு சுயேச்சைகள்

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளைக் கட்சித் தலைமை நிறைவேற்றாததால் பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ள சூழலில், ஆதரவு அளித்துள்ள சுயேச்சைகளோ விரக்தியில் உள்ளனர்.

புதுச்சேரியில் ஆட்சியமைக்கத் தேர்தலுக்கு முன்பாக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. பாஜகவினர் காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்தும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என முக்கியப் பிரமுகர்களையும் தங்கள் கட்சிக்கு இழுத்தனர். இதில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ ஜான்குமார், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் பாஜகவுக்குத் தாவினர். இதனால் காங்கிரஸ் ஆட்சியே இறுதிக் கட்டத்தில் கவிழ்ந்தது.

பாஜவில் இணைந்த நமச்சிவாயத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டதாலும், அதிகத் தொகுதிகளை என்.ஆர்.காங்கிரஸ் கைப்பற்றியதாலும் முதல்வர் பதவி ரங்கசாமிக்கு அளிக்கப்பட்டது. இதனால் நமச்சிவாயத்துக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவதாக பாஜக மேலிடம் உறுதியளித்திருந்தது. சிறிய ஊரான புதுச்சேரிக்குத் துணை முதல்வர் பதவியை உருவாக்க முதல்வர் ஒப்புதல் தராததால், இப்போது அந்தப் பதவியும் கானல் நீராகிவிட்டது.

இதேபோல ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அமைச்சரவைப் பங்கீட்டில் சபாநாயகர், 2 அமைச்சர்கள் என்ற நிலை உருவானது. இதனால் கல்யாணசுந்தரம் அமைச்சர் பட்டியலில் இடம்பெறவில்லை. ஜான்குமாரும், அவரின் மகன் விவியன் ரிச்சர்ட்டும் பாஜகவில் இணைந்து வெற்றி பெற்றதால் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்போது ஜான்குமாரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, ஊசுடு தனித் தொகுதியைச் சேர்ந்த சாய்சரவணக்குமார் அமைச்சராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பதவியை எதிர்பார்த்த ஏம்பலம் செல்வத்துக்கு சபாநாயகர் பதவியைக் கட்சி அளித்தது. ஆரம்பத்தில் சபாநாயகர் பதவி வேண்டாம் என செல்வம் மறுத்தார். கட்சி மேலிடம் அவரை சமாதானப்படுத்தி பதவியேற்க வைத்தது. காங்கிரஸிலிருந்து சென்ற முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், ஜெயக்குமார் ஆகியோருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால், இவர்களுக்குப் பதவி வழங்கப்படவில்லை.

ஆதரவு சுயேச்சைகள் விரக்தி

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 6 சுயேச்சைகளில் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் பாஜகவை ஆதரிக்கின்றனர். இவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என பாஜக மேலிடம் உறுதியளித்தது. எனினும் பாஜக சார்பில் தேர்வான எம்எல்ஏக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்ற இயலாததால் ஆதரவு சுயேச்சைகள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏக்கள் தரப்பில் பேசியபோது, "தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் பணியாற்றிய மேலிடக் குழுவினர் வாக்குறுதிகளைத் தந்திருந்தனர். தற்போது பதவி தொடர்பாக மேலிடக் குழுவை அணுகினால், கட்சியில் கமிட்டிகள்தான் பதவியைத் தருவதில் முடிவு எடுப்பார்கள் என்று கைவிட்டுவிட்டனர். இதனால் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜகவில் இணைந்து வென்றவர்களுக்கே இந்நிலை என்றால், ஆதரவு சுயேச்சைகளின் நிலை பற்றி ஏதும் சொல்லவேண்டியதில்லை" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x