

பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் 63 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று ஏராளமான மீன்களோடு கரை திரும்பினர்.
கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல தடைக்காலம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 63 நாட்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, நேற்றுகாலை பாம்பன் மீனவர்கள் கரை திரும்பினர். இவர்களுக்கு விலை மீன், கட்டா, கிளாத்தி, காரல், நெத்திலி, சீலா, பாறை, முரல், நகரை போன்ற மீன்கள் ஒவ்வொரு படகுக்கும் சுமார் 500 கிலோ முதல் ஒரு டன் வரை கிடைத்தன.
அதையடுத்து ஏலம் விடும் கூடத்தில் சிறிய ரக மீன்கள், பெரிய ரக மீன்கள், உயர் ரக மீன்கள் என தனித்தனியாகப் பிரித்து ஏலம் நடந்தது. வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை ஏலத்தில் வாங்கிச் சென்றனர்.