

டெல்லியில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்தார்.
மே 2 ஆம் தேதி பதவி ஏற்றாலும், கரோனா இரண்டாவது அலை பரவல் அதிகம் இருந்த காரணத்தால் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க இயலவில்லை. ஆனாலும், கரோனா தொற்று குறைந்தவுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பேன், தமிழக கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.
டெல்லியில் முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். டெல்லி தமிழக இல்லத்தில் அவரைத் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீஸார் அரசு மரியாதை அளித்தனர்.
பின்னர், மாலை 5 மணி அளவில் பிரதமர் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவருடன், அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் சென்றனர். பிரதமரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் 25 நிமிடம் பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். மேலும், நீட் தேர்வு ரத்து, வேளாண் சட்டங்கள் ரத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைத்தல் உள்ளிட்ட 25 துறை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் அளித்தார்.
இதையடுத்து, பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள் என, முக்கிய துறைகளில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு டெல்லி தமிழக இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்தார். இதில், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் இணைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.