

சீனாவின் சினோஃபார்ம் கரோனா தடுப்பூசிகளை 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்குச் செலுத்தும் பரிசோதனையை ஐக்கிய அரபு அமீரகம் தொடங்கியது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “3 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சீனாவின் சினோஃபார்ம் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தும் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 900 சிறுவர், சிறுமிகளுக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் 79% பேருக்கு கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், 60 வயதைக் கடந்த 80% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே அமீரகத்தில் பொது நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பைஸர், சினோஃபார்ம், ஸ்புட்னிக்-வி போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அமீரகத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.