டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்: யார் யாருடன் சந்திப்பு?- முழு விவரம்

டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்: யார் யாருடன் சந்திப்பு?- முழு விவரம்
Updated on
2 min read

2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். அவரை திமுக எம்.பி.க்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். 2 நாட்கள் டெல்லியில் தங்கும் முதல்வர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதன்முறையாக மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்ததால் இன்று சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மே 2ஆம் தேதி பதவி ஏற்றாலும், கரோனா இரண்டாவது அலை பரவல் அதிகம் இருந்த காரணத்தால் அவர் உடனடியாக டெல்லி செல்லவில்லை. ஆனாலும், கரோனா தொற்று குறைந்தவுடன் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பேன், தமிழக கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் டெல்லி செல்ல முடிவெடுத்து பிரதமரிடம் நேரம் கேட்டிருந்த நிலையில், ஜூன் 17 மாலை 5 மணிக்கு சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கிய நிலையில், இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், உதவியாளர் தினேஷ், தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.

முன்னதாக, முதல்வரை வரவேற்க தமிழக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் டெல்லி சென்றனர். டெல்லியில் சென்று இறங்கிய முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் நேராக அவர் டெல்லி ஓடிஐஎஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயம் கட்டிடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அவருக்குக் கட்டிடம் உருவாகும் விதம், அதன் மாதிரிகள் போட்டுக் காட்டப்பட்டு விளக்கப்பட்டது. பின்னர் நேராக டெல்லி வரும் முதல்வர்கள் தங்கும் தமிழக இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு அவரைத் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீஸார் அரசு மரியாதை அளித்தனர். பின்னர் திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர்.

அங்கு ஓய்வெடுக்கும் அவரை டெல்லியின் முக்கிய பிரமுகர்கள் சந்திக்கின்றனர். மதிய உணவுக்குப் பின் ஓய்வெடுக்கும் அவர், திமுகவின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் சரியாக மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் செல்கிறார்.

அவருடன் அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் செல்வர் எனத் தெரிகிறது. பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்குகிறார். அதற்கான கோரிக்கை மனுவையும் அளிக்கிறார். பின்னர் தமிழக இல்லம் திரும்புகிறார்.

மாலை 7 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கின்றனர். பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவும் சந்திக்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சந்திக்கின்றனர்.

இரவு டெல்லியில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரைச் சந்திக்கிறார். பின்னர் சென்னை திரும்புகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in