காற்றாலை இறகுகளை கையாளுவதில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து அதிக நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை அமெரிக்காவுக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து அதிக நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை அமெரிக்காவுக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்.
Updated on
1 min read

தூத்துக்குடி வஉசி துறைமுகம் அதிக நீளம் கொண்ட காற்றாலை இறகுகளை ஏற்றுமதிக்காக கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. வஉசி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காற்றாலை இறகுகள் கையாளுவதில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த 10-ம் தேதி 199.9 மீட்டர் நீளம் கொண்ட 'எம்.வி. பேக் அல்கோர்’ என்ற கப்பல் வந்தது. இந்தக் கப்பலின் ஹைட்ராலிக் பளு தூக்கி இயந்திரங்கள் மற்றும் துறைமுகத்தின் நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் 77.50 மீட்டர் நீளம் கொண்ட 24 காற்றாலை இறகுகள் கப்பலில் மூன்று அடுக்குகளாக ஏற்றப்பட்டன.

பின்பு கப்பல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள அரன்சாஸ் துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த காற்றாலை இறகுகள்ஸ்ரீ பெரும்புதூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வரை பிரத்யேக லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன.

இதற்கு முன்பு கடந்த 9-ம் தேதி 74.90 மீட்டர் நீளம் உடைய 84 காற்றாலை இறகுகளை ஏற்றுமதிக்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 423 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 4,462 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்கள் கையாளப்பட்டன.

காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்வதில் முதன்மை நுழைவாயில் துறைமுகமாக வஉ.சி துறைமுகம் திகழ்வதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in