கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்

கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம்
Updated on
1 min read

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களைக் கலைக்கப் போவதில்லை எனவும், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தைக் கலைத்துப் புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களைக் கலைக்க எதிர்ப்பு தெரிவித்து வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட தமிழக அரசுக்குத் தடை விதிக்க வேண்டும், ஏற்கெனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டுமென அந்த மனுக்களில் கோரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களை திடீரென்று கலைக்கக் கூடாது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், கூட்டுறவு சங்கத்தைக் கலைக்க தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டனர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட மாட்டாது என உறுதியளித்ததுடன், முறைகேடு நடந்த சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in