தேவேந்திர குல வேளாளர் அரசாணையை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தேவேந்திர குல வேளாளர் அரசாணையை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழகத்தில் ஏழு பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில், ஏழு பிரிவினரையும் தேவேந்திர குல வேளாளர் எனக் கருத வேண்டும் என, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, ஜூன் 1ஆம் தேதி தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், உலக வேளாளர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், “ஏழு பிரிவினரையும், தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து நாங்கள் அளித்த மனுவைப் பரிசீலிக்காமல், எங்கள் ஆட்சேபங்களைக் கேட்காமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. தற்போது தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளையும், வேளாளர் என வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றம் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்குத் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in