

புதுச்சேரியில் கரோனாவால் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களே பணிக்கு வந்தால்போதும் என்ற சுற்றறிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டு, வரும் ஜூன் 16 முதல் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா பரவலையடுத்து, புதுச்சேரி அரசின் அத்தியாவசியத் துறைகளைத் தவிர்த்து இதர துறைகளில் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு அதிகாரிகள் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என்று, ஏப்ரல் 21-ல் உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது இவ்வுத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசின் சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்துத் துறைகளுக்கும் இன்று (ஜூன் 14) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "குரூப்- பி மற்றும் குரூப்- சி பிரிவு அதிகாரிகள் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என்ற உத்தரவு, ஜூன் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் 16-ம் தேதி முதல் முழுப் பணியாளர்களுடன் இயங்கும். கரோனா தடுப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுப்பது அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.