தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் 

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் 
Updated on
1 min read

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஓராண்டுக்குச் செயல்பட ஏ.கே.எஸ்.விஜயனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஒரு கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி ஆகும். அரசு கார் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இவருக்கு அளிக்கப்படும். டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வருபவர் டெல்லியில் தமிழக அரசின் பிரதிநிதியாகத் தமிழகத்துக்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இயங்கும் பொறுப்பு மிக்கவர். தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மத்திய அரசு சார்ந்த விவகாரங்களைக் கண்காணிக்கும் அதிகாரம் உள்ளவர்.

இந்நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார். இதற்கு முன் அதிமுக அரசால் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டிருந்தார்.

டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.எஸ் விஜயன் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர். 2014ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். கடந்த முறை நாகப்பட்டினம் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அவர் போட்டியிடவில்லை.

முன்னாள் எம்.பி.யான ஏ.கே.எஸ்.விஜயன் தற்போது திமுக விவசாய அணியின் செயலாளராக உள்ளார். டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.எஸ்.விஜயன் ஓராண்டு இப்பதவியை வகிப்பார். வரும் 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமரைச் சந்திக்க உள்ளார். இந்நிலையில் ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in