

ஊரடங்கு காலத்தில் நகரும் பாலகம் மூலம் அனைத்து இடங்களிலும் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
ஈரோட்டில் செயல்படும் ஆவின் பால் விற்பனையகங்களில், பால் வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். பால் வாங்க வந்த மக்களிடம் பாலின் தரம் குறித்தும், பால் விலை குறைப்பு குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்தார்.
சென்னிமலை சாலையில் செயல்படும், மாவட்ட கால்நடை தீவன தொழிற்சாலையில் தீவனங் களின் இருப்பு விவரம், தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்த அமைச்சர், சித்தோட்டில் செயல்படும் ஈரோடு ஆவின் தலைமையகத்தில், பால் சேகரிக்கும் விதம், பால் பொருட்கள் தயாரிப்பதை பார்வையிட்டார்.
தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ஈரோடு ஆவினில் 512 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி 2 லட்சத்து 23 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப் பட்டதால், ஈரோட்டில் தினமும் 2,000 லிட்டர் பால் விற்பனை அதிகரித்து, தற்போது தினமும் 54 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன், விற்பனை 65 ஆயிரம் லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு ஆவினில் கடந்த வருடம் பால் பொருட்கள் விற்பனை மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி என்று இருந்த நிலையில், ஆறு மாதத்தில் இதனை ரூ.1.5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் நெய், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, துபாய் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்கு உட்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலையில் தினமும் 150 மெட்ரிக் டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுஒன்றியத்திற்கும் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை ரூ.6.80 கோடி வழங்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் நகரும் பாலகம் மற்றும் ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் எல்லா இடங்களிலும் மக்க ளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, ஈரோடு டி.ஆர்.ஓ., முருகேசன், அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி. வெங்கடாசலம், ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபால், ஆவின் பொது மேலாளர் சுபாநந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றன்ர்.