Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த நெசவாளர்கள்: நிவாரண உதவி வழங்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்

கரோனா பொது முடக்கம் காரணமாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டு நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோயில் நகரமான காஞ்சிபுரம் பட்டுக்கு பெயர் பெற்ற நகரமாகும். இந்த நகரத்தில் 12 ஆயிரம் பட்டு நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் மாதம் முழுவதும் குடும்பத்துடன் வேலை செய்தாலும் இவர்களுக்கு குறைவான கூலியே கிடைத்து வந்தது. இதனால் பலர் வேறு தொழில்களுக்கு ஏற்கெனவே மாறி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பட்டு விற்பனை என்பது சுபமுகூர்த்தம், சுற்றுலா பயணிகளை மையமாக கொண்டு நடைபெறுவது. காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு வரும்வெளிமாநில சுற்றுலாப் பயணிகள்பட்டுச் சேலைகளை வாங்கிச் செல்வர். கோயில்கள் மூடப்பட்டுள்ளதாலும், பொது முடக்கத்தாலும் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இதனால் பட்டு வியாபாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. பட்டுச் சேலைகள் விற்பனை ஆகாமல் தேங்கியதால் நெசவாளர்களுக்கும் சேலை நெய்வதற்கு ஆர்டர்கள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.

இதுகுறித்து சுதந்திரப் போராட்ட வீரர் கே.எஸ்.பார்த்தசாரதி பட்டு நெசவாளர் சங்கத்தின் துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "காஞ்சிபுரத்தில் பட்டு நெசவாளர்கள் பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பொது முடக்கத்தின்போது நெசவாளர்களுக்கு மளிகைப் பொருட்கள், ரூ.2 ஆயிரம் உதவித் தொகை போன்றவை வழங்கப்பட்டன. அவை கூட தற்போது வழங்கப்படவில்லை. அரசு பட்டு நெசவாளர்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x