Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு மாதம்தோறும் உரியதண்ணீர் காவிரியில் திறக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்:
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை வழக்கமான ஜூன் 12-ம் தேதி திறக்கத் திட்டமிட்டுளோம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாதாந்திர அடிப்படையில் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை எதிர்நோக்கியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து திறக்கப்படும் நீரையே குறுவை சாகுபடி முழுமையாக நம்பியுள்ளது. நீர் திறப்பில் பற்றாக்குறை ஏற்பட்டால், தற்போதைய குறுவைப் பயிர்கள், அடுத்த மாதம் பயிரிடப்படும் சம்பா பயிர்கள் பாதிக்கப்படும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாதம்தோறும் நிர்ணயித்துள்ள நீர், பில்லிகுண்டுலு பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வருவது உறுதி செய்யப்படும்பட்சத்தில், லட்சக்கணக்கான ஏக்கர் குறுவைப் பயிர்கள் காப்பாற்றப்படும்.
எனவே, காவிரி ஆணையத்துக்கு அறிவுறுத்தல் வழங்கி,மாதம்தோறும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT