தனியார் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை, உணவு செலவுத் தொகையை வழங்குக: புதுவை அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை, உணவு செலவுத் தொகையை வழங்குக: புதுவை அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கரோனா சிகிச்சை மற்றும் உணவு செலவுக்கான தொகையை புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு வழங்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பரிந்துரையின் அடிப்படையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்பதை மீறி புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணம் வசூலிப்பதாக ஏ.ஆனந்த் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மருத்துவமனை தரப்பில் அரசால் பரிந்துரைத்து அனுப்பப்படுபவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், சிகிச்சை அளிப்பதற்கான கட்டணத்தையும், உணவு வழங்கியதற்கான கட்டணத்தையும் அரசு இதுவரை முழுமையாக செலுத்தவில்லை என்றும், 1.63 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருப்பதாகும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசு தரப்பில் மருத்துவமனையின் செலவினங்களுக்காக 20 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரையிலான சிகிச்சை மற்றும் செலவினங்களுக்காக 17 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவமனை ரசீதுகளை அனுப்பி உள்ளதாகவும், அவற்றை ஆய்வு அவசியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர கரோனா நோயாளிகளிடம் மருத்துவமனை தரப்பில் நேரடியாக சில தொகை வசூலிக்கப்படிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியது தொடர்பான ரசீதுகளை ஆதாரத்துடன் 4 வாரங்களில் புதுச்சேரி அரசிடம் அளிக்க வேண்டும்.

அவற்றை ஆய்வு செய்து சட்டபட்டபடி செலுத்த வேண்டிய தொகையை வழங்க அடுத்த 4 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in