

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் கனிசமாக குறைந்து வரும் நிலையில், புதிதாக 429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 9,159 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 322 பேர், காரைக்காலில் 83 பேர், ஏனாமில் 5 பேர், மாஹேவில் 19 பேர் என மொத்தம் 429 (4.68 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 8 பேர், காரைக்காலில் 3 பேர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனாம், மாஹேவில் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,668 (புதுச்சேரி-1,337, காரைக்கால்-200, ஏனாம்-100, மாஹே-31) ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 942 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,214 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 6,156 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 967 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 860 (92.48 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 11 லட்சத்து 46 ஆயிரத்து 606 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 534 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 134 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் காரோனா தொற்றின் ஒருநாள் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது அது கனிசமாக குறைந்து வருகிறது. இருப்பினும் முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.