Published : 10 Jun 2021 06:39 PM
Last Updated : 10 Jun 2021 06:39 PM

நகை, பணம் திருடிய புகாரில் எஸ்.ஐ. உள்ளிட்ட 3 காவலர்கள் கைது, சஸ்பெண்ட்: எஸ்.பி. செல்வகுமார் உத்தரவு  

நச்சுமேடு கிராமத்தில் உதவி ஆய்வாளர் அன்பழகன் பணத்தை ஒப்படைக்கும் காட்சி.

வேலூர் 

வேலூர் அருகே கள்ளச்சாராய ரெய்டுக்குச் சென்ற காவல்துறையினர் அங்கிருந்த வீடுகளில் பீரோக்களை உடைத்து ரூ.8.50 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற புகாரில் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

வேலூர் அருகேயுள்ள குருமலை என்ற மலை கிராமத்துக்கு அருகில் உள்ள நச்சுமேடு என்ற குக்கிராமத்தில் சட்டவிரோதமாகச் சாராயம் காய்ச்சுவதாக அரியூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவலர்கள் நேற்று (ஜூன் 9) சாராய ரெய்டில் ஈடுபட்டனர். அந்த கிராமத்தில் இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோர் சாராயம் காய்ச்சுவதாகக் காவலர்களுக்குத் தகவல் தெரியவந்தது. அவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்த்தபோது யாரும் இல்லை.

இதையடுத்து இரண்டு பேரின் வீடுகளில் இருந்த சுமார் 1,000 லிட்டர் சாராய ஊரல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப் பொருட்களைப் பறிமுதல் செய்து காவலர்கள் அழித்தனர். பின்னர், யாரும் இல்லாததால் காவலர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது காவலர்கள் பணம் மற்றும் நகைகளைத் தங்களுடன் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், சாராய ரெய்டுக்கு வந்த காவலர்கள், செல்வம் மற்றும் இளங்கோ ஆகியோரின் வீட்டில் நுழைந்து பீரோவை உடைத்து ரூ.8.5 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நச்சுமேடு கிராமத்தைச் சேர்ந்த சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில், பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா, மலை கிராமத்துக்கு விரைந்து சென்றபோது, மலைப் பாதையில் எதிரே வந்த உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்களை வழிமறித்து அவர்களை நச்சுமலை கிராமத்துக்கு மீண்டும் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், காவல்துறையினர் திருடிச் சென்றதாகக் கூறப்பட்ட பணம் மற்றும் நகைகள் செல்வம் மற்றும் இளங்கோ குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை கிராம மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.

விசாரணை அதிகாரியாக சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் நியமனம்

கள்ளச்சாராய ரெய்டுக்குச் சென்ற காவலர்கள் பணம் மற்றும் நகையைத் திருடிய புகார்கள் குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று இரவு விசாரணையைத் தொடங்கினார். இதன் முடிவில், உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 454 (அத்துமீறி நுழைதல்), 380 (நகை, பணத்தைத் திருடுதல்) என இரண்டு பிரிவுகளின் கீழ் அரியூர் காவல் நிலையத்தில் இன்று (ஜூன் 10) வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்துக் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘கள்ளச்சாராயம் காய்ச்சும் புகாரின் பேரில் ரெய்டுக்குச் சென்றவர்கள் இளங்கோ, செல்வம் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கிருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மலைக் கிராமத்தில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் கிராம மக்கள் சிலர் நகை, பணம் திருட்டுப் போனதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் காவல் ஆய்வாளர் சுபா, நேரில் சென்று விசாரணை நடத்த அனுப்பி வைக்கப்பட்டார். அவர் சென்று விசாரணை நடத்தியதுடன் அவர்களது வீட்டிலே இருந்த பணம், நகை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அவர்களிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளார். அந்த வீடியோ இப்போது காவலர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. ஆனால், காவலர்கள் யாரும் பணத்தைத் திருடவில்லை’’ என்று தெரிவித்தனர்.

எனினும் பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிச் சென்ற புகாரில் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x