

புதுச்சேரியில் புதிதாக 507 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 92.48 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 10) தெரிவித்துள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,215 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 366 பேர், காரைக்காலில் 98 பேர், ஏனாமில் 20 பேர், மாஹேவில் 23 பேர் என மொத்தம் 507(6.17 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 7 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். மாஹேவில் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,657 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 255 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 998 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,707 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 6,705 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 646 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 893 (92.48 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 11 லட்சத்து 38 ஆயிரத்து 391 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 73 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 851 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி பெறுவது பெரும் அளவில் குறைந்துள்ளது. தற்போது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் இணையவழி மூலம் முன்பதிவு செய்து மிக ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். இதேபோல் பொதுமக்களிடம் ஆர்வமும் ஒத்துழைப்பும் இருந்தால் புதுச்சேரியை 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்றி கரோனாயில்லா மாநிலமாக மாற்றலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.