

கள்ளக்குறிச்சி அருகே இன்று அதிகாலை ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உட்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (23). இவர் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண். இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் அருகிலுள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து அவரது மாமியார் செல்வி (52), செல்வியின் மகள் அம்பிகா (33) ஆகிய 3 பேரும், இன்று அதிகாலை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இவர்களுடன் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் மீனா, ஆம்புலன்ஸ் உதவியாளர் மூங்கில் துறைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி (27) சென்றுள்ளனர். அப்போது ஆலத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணிப் பெண்ணான ஜெயலட்சுமி, அவரது மாமியார் செல்வி, செல்வியின் மகள் அம்பிகா மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் சங்கராபுரத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கலியமூர்த்தி (36), புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீனா, ஆம்புலன்ஸ் உதவியாளர் தேன்மொழி ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அரசு செவிலியர் மீனா கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.